Sunday 16 June 2013

மருந்து மாத்திரை வேண்டாம்... மனோதிடம் போதும்! நம்பிக்கை நட்சத்திரம் கோவை ஜெகதீஷ்!


'நாலு இடத்துக்குப் போயிட்டு வந்தால்தானே... நல்ல நண்பர்களோட சகவாசம் கிடைக்கும். இப்படியே வீட்டுக்குள்ள முடங்கிக்கிடந்தா..?’ என்று அந்தக் காலத்தில் பிள்ளைகளுக்கு போதிக்க ஒரு வசனம் உண்டு. ஆனால், இன்றோ, 'நாலு சுவருக்குள் நட்பைப் பெருக்கலாம்’ என்கிறார் கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ். 
கழுத்துக்கு கீழே அனைத்து உடல் உறுப்புகளும் செயலிழந்த நிலையில், வலது கை விரல்களின் அசைவை மட்டுமே வைத்து, கணினி அறிவால் இணையத்தில் அசத்தும் சாதனை இளைஞர் ஜெகதீசின் வயது 22.
கடுமையான உடல் சார்ந்த நெருக்கடிகளுக்கு இடையில், தமிழ் ஈழம் கோரிய மாணவர்களின் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கெடுத்து, அனைவரையும் வியக்கவைத்தவர். எந்த வேலை செய்வதாக இருந்தாலும் தனக்கே அடுத்தவர் உதவி நிச்சயம் தேவை என்ற சூழலில், உடல் வேதனையைப் பொருட்படுத்தாது, தேடிச் சென்று மற்றவர்களுக்கு உதவுகிறார். வியக்கவைக்கிறது இவரது தன்னம்பிக்கை.
ஆட்டோவில் கைக்குழந்தை போல படுத்தபடி பயணிக்கும் ஜெகதீஷ§க்கு பாட்டிதான் எல்லாம். ஜெகதீஷை, குழந்தை போல தூக்கி, அவருக்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக சக்கர நாற்காலியில் அமர்த்துகிறார். கை, கால்கள் எல்லாவற்றையும் பேடில் கட்டிவிடுகிறார்.  கழுத்து நிற்கத் தனியாக ஒரு பேட் கட்டிவிட்டால்தான் அவரால் உட்காரவே முடிகிறது. கோவை பெரியார் படிப்பகத்தில் ஜெகதீஷை சந்தித்தோம்.
''நான் பிறந்தப்ப நல்லாத்தான் இருந்தேனாம். ஆனா எல்லா குழந்தைகளும் போல நிக்க வேண்டிய நேரத்துல என்னால நிக்க முடியாமப் போச்சு. குழந்தைக்குரிய அந்தந்த நேரத்தில், நிற்க, நடக்க, ஓட கால்களுக்கான எந்த அசைவும்  என்னிடம் இல்லை. உடம்பில் போதிய வலுவில்லாமல் ரொம்பவே பிரச்னை. நிறைய டாக்டர்கள்கிட்ட கூட்டிட்டுப் போனாங்க. எனக்கு ஏழு வயசா இருக்கிறப்ப, ஆபரேஷன் பண்ணா சரியாகிடும்னு ஒரு டாக்டர் சொல்ல, நிறைய செலவழிச்சு ஆபரேஷன் பண்ணாங்களாம். ஆனா, அந்த ஆபரேஷன்ல ஏதோ தப்பாப் போனதால, என்னால் உட்காரக்கூட முடியாமப்போச்சு.  அதுக்கு அப்புறமும் நிறைய ட்ரீட்மென்ட்ஸ் எடுத்துக்கிட்டேன். மாத்திரை, மருந்துனு நிறைய செலவாச்சு. ஆனா, ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. உடம்பு இன்னும் மோசமானதுதான் மிச்சம். மூணு வருஷமா எந்த ட்ரீட்மென்ட்டும் எடுக்க வேணாம்னு முடிவு பண்னேன். நான் ஒரே பையன்கிறதால என் பெற்றோரும் என்னை வற்புறுத்தலை. இப்பதான் ரொம்பவே எனர்ஜியோட இருக்கேன். உடலில் வலு இருக்கோ இல்லியோ, மனசுல நல்ல தைரியம் இருக்கு.
இதுதான் என் நிலைமை. எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான காரணத்தை தெரிஞ்சுக்கக்கூட நான் விரும்பலை. நீங்களும் கேட்காதீங்க.  இதை மாத்த முடியாது. எதைப் பத்தியும் கவலைப்படாமல், நம்மால் சாதிக்க முடியும்னு தோணுச்சு. என்னை மாதிரியே இருக்கும்  குழந்தைகளோட பள்ளியில் படிச்சதால், எனக்கு என்னோட பலம் முழுமையாத் தெரிஞ்சது.
நிறையப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிச்சேன். செல்போன்ல கேம் விளையாடுவேன். கம்ப்யூட்டர் மேல் ஆசை வந்தது. முதல்ல கேம் விளையாடத்தான் கம்ப்யூட்டர் பயன்படுத்தினேன். அதைத் தாண்டி கம்ப்யூட்டர் மூலம் நிறைய சாதிக்க முடியும்னு தோணுச்சு. இன்டர்நெட் மூலம் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ இணையத்தில் உலக சினிமாக்களுக்கு விமர்சனம் எழுதிட்டு இருக்கேன். இன்னும் நிறைய விஷயங்களைக் கத்துக்கணும். கத்துக்கிட்டே இருக்கேன். நான் கத்துக்கிட்டதை சொல்லிக்கொடுத்துட்டும் இருக்கேன்.'' என்று உற்சாகத்துடன் பேசும் ஜெகதீஷ், கம்ப்யூட்ட்ர் மட்டுமே உலகம் என்று இல்லாமல், பாட்டியின் துணையுடன் வெளி இடங்களுக்கும் சென்று வருகிறார்.    
''நான் எங்கே போகணும்னு ஆசைப்பட்டாலும், என் பாட்டி அழைச்சிட்டுப் போவாங்க.  இந்த நாலு வருஷத்துல. வெளிய போற நேரம், வீட்ல என்னை யாராவது பார்க்க வர்ற நேரம் மட்டும்தான் சக்கர நாற்காலி. மத்த நேரம் எல்லாம் படுக்கைதான். படுத்தபடி, மவுஸ் பேட் மூலமா கம்ப்யூட்டர்ல வேலை செய்வேன்.  
பேஸ்புக், ட்விட்டர்ல எனக்கு ஆயிரத்துக்கும் அதிகமான ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. என் விமர்சனத்தையும், எழுத்துக்களையும் படிச்சு நிறைய ரசிகர்களைச் சம்பாதிச்சிருக்கேன். மாணவர் போராட்டத்தில மனப்பூர்வமாக் கலந்துக்கிட்டேன். அதுதொடர்பான என்னோட பதிவு, டெல்லி வரை எதிரொலிச்சது. இதெல்லாமே எனக்கு சந்தோஷத்தைத் தருது.
தமிழ் சினிமாவில் திரைக்கதையாளர் எனத் தனி இடத்தை உருவாக்க வேண்டும். அதை நோக்கி நண்பர்கள் இணைந்து முயற்சிக்கிறோம். அரசியல்ரீதியிலான போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளோம். இதற்கு எல்லாம் புத்தக வாசிப்புதான் காரணம். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதற்கு எனது உடல் பாதிப்புகள் தடையாக இருக்காது.' என்கிறார் ஜெகதீஷ்.
'நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி’ என்பது  அப்துல்கலாம் ஒரு நாள் ஜெகதீஷிடம் சொன்னாராம். அது நிஜம்!
ச.ஜெ.ரவி.

No comments:

Post a Comment